சவர்க்காரத்தினால் இவ்வளவு நன்மைகளா?

 

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவியுள்ள இந்த காலகட்டத்தில் சந்தையில் சவர்க்காரத்துக்கான தேவை அதிகரித்துவிட்டது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலின் படி நாம் அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சரி கைகளையும் உடம்பையும் சுத்தப்படுத்த மட்டுமா சகர்க்காரம் உண்டு? இல்லவே இல்லை. வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்பதை இன்று சொல்லித்தரவுள்ளோம்.

 

கதவின் சரணல்களுக்கு/ திருகாணி இறுக்குவதற்கு

இந்த விடயம் பெரும்பாலான மரவேலைப்பாடுகள் செய்யும் அண்ணாமார்களுக்கு நன்றாகவே தெரியும். கதவுகளில் உள்ள திருகாணி போட்டு இறுக்கிய கள் நாட்டிசென்று இருகிவிட்டால், கதவைத் திறக்கும்போது இரைச்சல் சத்தம் கேட்கும். அந்த சத்தம் மீண்டும் கேட்காமல் இருக்க சிலர் கதவை அகற்றி புதிய சரணல்களை மாற்றுகிறார்கள். மேலும் சிலர் கடைகளில் விற்கப்படும் பலவிதமான இரசாயன திரவங்கள் மற்றும் ஒயில்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் குறைந்த செலவில் சுலபமாக வேலையை கச்சிதமாக முடிக்க எண்ணுபவரே ஒரு துண்டு சோப்பை பயன்படுத்தி திருகாணியை திருகுவார். ஒரு துண்டு சோப்பில் ஆணியை சற்று உருட்டி எடுத்து, அதனை இறுக்குவதால் சரணலில் இருந்து சத்தமும் கேட்காது, சுலபமாகவும் இறுக்கிவிடலாம்.

 

குளியலறை கண்ணாடி

உங்கள் குளியலறையின் கண்ணாடியை துணியால் மட்டும் வெறுமனே துடைக்க வேண்டாம். முதலில் சிறிது சோப்பை எடுத்து நன்கு தேய்த்துக்கொள்ளவும். அதன் பின்னர் ஒரு மென்மையான துணி அல்லது திசு மூலம் மெதுவாக அழுத்தி துடைக்கவும். அதன் பின்னர் பாருங்கள் கண்ணாடியின் நிறம் முன்னரைவிட பிரகாசமாக தெரியும்.

 

துணி வைக்கும் அலுமாரி

எமது தாத்தா பாட்டி காலத்திலிருந்தே துணிகளை வாசனையாகவும், புதியதாகவும் வைத்திருக்க கற்பூர பந்துகளை பயன்படுத்தினோம். அதற்கு பதிலாக எப்போதாவது நீங்கள் சவர்க்காரத்தை பயன்படுத்த முயற்சித்துள்ளீர்களா? கற்பூர பந்துகளின் மூக்கை அரிக்க வைக்கும் வாசனையை அதிகமானோர் விரும்ப மாட்டார்கள். மென்மையான மற்றும் புத்துணர்வான வாசனைக்காக துணிகளுக்கு இடையில் இனி சவர்க்காரத்தை வைக்கவும்.

 

சுவற்றில் ஏற்பட்ட சிறு துளைகள்

வீடுகளில் சிறு சிறு ஆணியால் இடப்பட்ட துளைகளை கொண்ட வெற்று சுவர்கள் அதிகம் இருக்கும். அவை வீட்டுக்கே ஒரு வித அவலட்சணத்தை கொடுக்க கூடியது. அவற்றை பார்க்கும் போது சில சமயங்களில் எரிச்சலும் ஏற்படும். அதற்கென்று, புதிய சுவரையா கட்டமுடியும்? அல்லது அதை மறைக்க மேசன் ஒருவரையா கொண்டுவர முடியும்? அதெல்லாம் தேவைப்படாது என்றுதான் நாங்கள் சொல்கிறோம். ஆம் ஒரு சவர்க்காரக்கட்டியினால் முடியும். அதற்கு உலர்ந்த சோப்பின் ஒரு துண்டை பயன்படுத்தி துளையுள்ள அப்பகுதியில் சவர்க்காரத்தை ஒத்திவிட வேண்டும்.

 

உடைந்த கண்ணாடித்துகள்கள்

வீட்டில் கண்ணாடி பொருட்கள் உடைந்தால் நாம் விரைவாக தும்புத்தடியால் பெருக்கி எடுத்து விடுவோம். ஆனால் சிறு சிறு கண்ணாடி துண்டுகள் தும்புத்தடிக்கு அகப்படாமல் அதே இடத்தில் இருக்கும். அவை பிறகு நம் கால்களில் குத்தி அவதிப்படக்கூடும். கண்ணாடி பொருள் உடைந்த இடத்தில் ஒரு சவர்க்காரக்கட்டியை கொண்டு தேய்த்து எடுப்பதன் மூலம் அந்த இடத்திலுள்ள சிறு சிறு கண்ணாடி துண்டுகளும் சவர்க்காரத்தில் ஒட்டிக்கொள்ளும்.

 

நுளம்புக்கடியின் அரிப்பு

 

 

 

நுளம்பு கடித்து விட்டால் அந்த இடத்தில் அரிப்பு ஏற்படுவது சகஜமான விடயம். அது நமக்கு நடந்தால் இரத்தம் குடித்த நுளம்பை கொன்று விட்டு கடித்த இடத்தில் அரிப்பு போகும் வரை சொறிவது வழக்கம். சிலருக்கு அந்த அரிப்பு நீண்ட நேரம் இருக்கும். அந்த சந்தர்ப்பத்தில் நுளம்பு கடித்த இடத்தில் ஒரு ஈரமான சவர்க்காரத்தை வைத்து தேய்த்து விட்டாலும் அரிப்பு நின்றுவிடும்.

 

தையல் ஊசி

துணிக்குள் ஊசி நுழையாமல் அவஸ்த்தைப்படும் சந்தர்ப்பங்கள் அதிகம். அநேகமாக தையல்காரர்கள் இந்த பிரச்சினையை அனுபவிப்பார்கள். அந்த நேரத்தில் ஒரு சவர்க்காரத்தை எடுத்து அதில் அந்த தையல்ஊசியை தேய்த்துப் பாருங்கள். இலகுவாக தைக்கலாம்.