மருந்தாக பயன்படுத்தக்கூடிய பூக்கள்

 

பூக்கள் என்றாலே அழகு என்று முதலில் கூறுவார்கள். பூக்களை பூஜை அறையிலும் பெண்களின் அழகான கூந்தலிலும் சில சமயங்களில் தன் காதலை வெளிப்படுத்த ஆண்கள் பயன்படுத்தும் பொருளாகவும் பார்க்கின்றனர். அவற்றிலும் பார்க்க பல பயன்கள் இந்த பூக்களில் உள்ளன. இதற்கு முன்னர் நாம் தந்த ஒரு கட்டுரையில், பூக்களின் மூலம் தயாரிக்கக்கூடிய உணவுப்பண்டங்கள் பற்றி பார்த்திருந்தோம். அவ்வாறே, இன்று மருந்திற்கு பயன்படுத்தக்கூடிய சில பூக்களை பற்றி பார்ப்போம்.

 

தோல் வியாதி, நீரிழவு நோய்களுக்கு ஆவாரம்பூ

இரத்தத்துக்கு மிகவும் பயன்தரும் ஆவாரம் பூவை காயவைத்து அரைத்து ஒரு வேளைக்கு 15 கிராமினை நீரில் போட்டு கசாயம் போல் செய்து பால், சர்க்கரை கலந்து பானம் போல பருகி வந்தால் உடல்சூடு,  நீரிழிவு,  நீர்க்கடுப்பு போன்ற நோய்கள் தீரும். ஆவாரம்பூவை காயவைத்து அரைத்து கிழங்கு, மா, கற்றாழையுடன் சேர்த்து, உடலில் தேய்த்து குளிப்பதால் துர்நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும்.

 

உடல் உஷ்ணத்திற்கு அல்லிப்பூ

வெள்ளை அல்லிப் பூவில் மருத்துவ குணம் அதிகமாக உள்ளது. அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள் அல்லி இதழ்களையும், உள்ளேயுள்ள மகரந்த மணிகளையும் பச்சையாகச் சாப்பிடலாம். நீரிழிவு உள்ளவர்கள் அல்லிப்பூவில் பலூடா செய்து சாப்பிட்டால் நோய் கட்டுப்படும்.

 

மலச் சிக்கலுக்கு நெல்லிப்பூ

உடல் குளிர்ச்சிக்கு, இதனுடன் விழுதி இலை, வாத நாராயணா இலை சேர்த்து கசாயமாக செய்து  வைத்து இரவில் சாப்பிட காலையில் சுகபேதி உண்டாகும். மலச்சிக்கலுக்கு இது உகந்தது.

 

மார்பக வலிகளுக்கு செம்பருத்திப்பூ

இருதய பலவீனமடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்பு வலியால் அவதிப்படுபவர்கள் இந்தப் பூவை தண்ணீரில் போட்டு சூடாக்கி காலையும், மாலையும் குடித்து வந்தால் இருதயம் பலமடையும்.

 

இரத்த சுத்திகரிப்புக்கு தாமரைப் பூ

தாமரைப் பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நரை, திரை, மூப்பு ஆகிய மூன்றும் ஏற்படாது. வெள்ளைத் தாமரைப் பூவைச் சுத்தம் செய்து குடிநீர் தயாரித்து பருகி வந்தால் இரத்த மூலம், சீதபேதி குணமடையும் என்பர். மூளை வளர்ச்சிக்கு இது முக்கிய மருந்தாகும்.

 

சளிகளுக்கு ரோஜாப்பூ

பாலில் ரோஜா இதழ்களை போட்டு குடித்து வந்தால் நெஞ்சில் இருக்கும் சளி நீங்கும். இரத்த விருத்திக்கும் துணை செய்யும்.  குடல்புண், தொண்டைப் புண் குணமாக்குவதற்கும் ரோஜா மலர் பயன்படுத்தப்படுகின்றது.  ரோஜாவிலிருந்து தைலம் செய்து எடுக்கலாம். காது வலி, காது குத்தல், காதில் ரோகம், காதுப்புண் என்பவற்றுக்கு இத்தைலம் பயன்படுத்தப்படுகின்றது.

 

கண் சம்பந்தமான நோய்களுக்கு பவளமல்லிப்பூ

இதனை கண் சம்பந்தமான நோய்களுக்கும் பயன்படுத்தலாம்.  இதன் வாசனை ஞானத்தை அளிக்கக் கூடியது,  அறிவை பெருக்க வல்லது. அத்துடன் இந்த மரத்தின் கீழேதான் வாயுபுத்திரன் தவம் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

 

ஆண்மை குறைவுள்ளவர்களுக்கு இலுப்பைப்பூ

மெலிந்த உடலுள்ளவர்கள் இலுப்பை பூக்களை பசும்பாலில் போட்டு அரைத்து சூடாக்கிய பாலுடன் சிறிது சர்க்கரை சேர்ந்து பருகி வந்தால் சில நாட்களுள் உடம்பு தேறும். இலுப்பை பூவை வைத்து ஒத்தடம் கொடுத்தால் உடலில் உள்ள வீக்கம் குறையும்.  ஆண்மைக் குறைவு உள்ளவர்கள் பசும் பாலுடன் இலுப்பைப் பூ கசாயத்தைச் சேர்த்து பருகினால் ஆண்மை குறைபாடு நீங்கும்.

 

மூக்கடைப்பு, சளிக்கு தூதுவளைப்பூ

தூதுவளைப் பூவை வதக்கி துவையலாக அரைத்துச் சாப்பிட்டால் சளி, மூக்கடைப்பு என்பன குணமாகும்.  தூதுவளை பூவைப் போன்று தூதுவளை இலையையும் துவையல் செய்து சாப்பிட்டால் நல்ல பயன்கள் கிடைக்கும்.