தலை அரிக்கின்றதா? – இவற்றை பின்பற்றி பயன்பெறுங்கள்

 

தலையில் அரிப்பு ஏற்படுவதற்கு பிரதான காரணம் பொடுகு தொல்லையாகும். ஸ்கால்ப் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றுகளால் பாதிக்கப்பட்டுகூட அரிப்பு ஏற்படலாம். தலையில் பேன் இருந்தால் கடுமையான அரிப்பு தொல்லை இருக்கும். போதுமான ஈரப்பதம் இல்லாவிட்டாலும் தலையில் அரிப்பு அதிகமாக ஏற்படும். மோசமான சுகாதாரம் மற்றும் கெமிக்கல் நிறைந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களால் ஏற்படக்கூடிய நோய்தொற்றுகள்  ஏற்படலாம்.  தலையில் அதிகமாக வியர்த்தாலும் அரிப்பு அதிகமாக இருக்கும். இது தவிர, மனஅழுத்தம் மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம் கூட அரிப்பை ஏற்படுத்தக்கூடும்.  இதற்கான சிறந்த தீர்வை இங்கே பார்க்கலாம்.

கூந்தல் பராமரிப்பிற்கு எலுமிச்சை மிகவும் சிறந்தது. எலுமிச்சைச் சாற்றை மண்டையோடு மற்றும் கூந்தலில் தடவி,  சில நிமிடங்கள் கழித்து தண்ணீரில் அலசிடவும். அது அரிப்பை நீக்கி கூந்தலை வலுவாக்கும்.

கற்றாழையின் சாற்றை எடுத்து ஸ்கால்ப் பகுதியில் நன்கு தடவி 15 நிமிடங்கள் ஊறவிடவும். பின்பு, வெறும் தண்ணீரில் கழுவுங்கள். அதனால், அரிப்பு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

 

லாவெண்டர் எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய், சீமைச்சாமந்தி எண்ணெய் ஆகியவை அரிப்புக்கு சிறந்த இயற்கை வீட்டு வைத்தியம். இந்த எண்ணெய்களை ஒன்றாக கலந்து,  அத்துடன் சிறிது நீர் சேர்த்து கலந்து தலையில் தேய்த்தால் அரிப்பு நீங்கும்.

தலை அரிப்பு பிரச்சினைக்கு ஒலிவ் எண்ணெய், மார்கசா எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் டி-ட்ரீ ஒயிலை பயன்படுத்தவும். ஒலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயின் கலவையானது பொடுகுக்கான சிறந்த இயற்கை மருந்தாகும்.

 

தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு 5 முதல் 6 முறை தலையை சீப்பு கொண்டு சீவி விட்டு தூங்கவும். இதனால், மண்டையோட்டில் இரத்த ஓட்டம் சீராகி, அனைத்து வித மண்டையோட்டு பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும்.

 

தலை அரிப்பு பிரச்சினைக்கும், உணவிற்கும் சம்பந்தம் உண்டு. உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்த உணவுப்பழக்கம் தீர்வைத் தரும் என்பதை அனைவரும் ஏற்கொள்கின்றனர். தலையும், உடலில்தானே உள்ளது. கூந்தல் ஆரோக்கியத்திற்கும் உணவுப்பழக்கம் நல்லதொரு முன்னேற்றத்தை தரும்.

வைட்டமின் பி, வைட்டமின் சி, ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் போது, நோய்தொற்றுகள் மற்றும் அழற்சியை சரிசெய்ய முடியும். எனவே, தலையில் அரிப்பு தொல்லை அதிகமாக இருந்தால், நீங்கள் உண்ணும் உணவில் கீரைகள், சாலட்கள், பயறு வகைகள் மற்றும் பலவண்ண காய்கறிகள் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

இதுபோன்ற உணவுகளில், புரதச்சத்து அதிகமாக உள்ளதால், கூந்தலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நன்மை கிடைக்கும். சிறந்த ஆரோக்கியமான கூந்தலை பெற வேண்டுமென்றால், சிறந்ததொரு கூந்தல் பராமரிப்பு பொருட்களை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம்.

 

இயற்கையான பொருட்களை மற்றும் வீட்டிலேயே தயாரித்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்த பழகிக் கொள்ளுங்கள். சல்பேட் இல்லாத ஷாம்பு பயன்படுத்துவது மட்டுமே சிறந்தது.

சீப்பை யாரோடும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.  உங்களது கூந்தலை இயற்கையான, மென்மையான ஷாம்பு கொண்டு தொடர்ந்து சுத்தப்படுத்துங்கள்.

முடியை சுத்தமாக வைத்துக் கொள்வதே தலையில் அழுக்கு மற்றும் குப்பை சேராமலும், பொடுகு தொல்லை ஏற்படாமலும்   தடுக்க உதவிடும்.

இது தவிர, தலையணை உறை,  சீப்பு,  டவல் போன்றவை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.  மேலும், இது போன்ற தனிப்பட்ட பொருட்களை  யாருடனும் பகிர்ந்து கொள்ளவே கூடாது. ஏனென்றால், அதனால்கூட தலையில் நோய்த் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.