தாய்ப்பால் அதிகம் சுரக்க சில பிரத்தியேகமான உணவுகள் காணப்படுகின்றன. குழந்தை பிறந்த பின்பு குழந்தைகளுக்கு வழங்கப்படும் முதல் உணவு மற்றும் முக்கிய உணவாக இருப்பது தாய்ப்பால். குழந்தைக்கு குறைந்தது 6 மாத காலமாவது கண்டிப்பாக தாய்ப்பாலை கொடுக்க வேண்டும். இதுதான் குழந்தைகளுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். குழந்தைக்கு தாய்ப்பாலை விட சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை. சிலருக்கு தாய்ப்பால் குறைவாக சுரக்கும். அதற்கு தாயிடம் உள்ள மனஅழுத்தம், தூக்கமின்மை, சத்துள்ள ஆகாரம் உட்கொள்ளாமை, உடல் வறட்சி என்று பல காரணங்கள் இருக்கும். தாய் என்ன சாப்பிடுகிறாரோ அதுதான் குழந்தைக்கு சத்தாக சென்று சேரும். அதனால் தாய்மார்கள் குழந்தைகளுக்காகவாவது சத்துள்ள உணவு பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். உணவுப் பொருட்களை ஒரே சமயத்தில் எடுத்துக் கொள்ளலாமல் இடைவெளி விட்டு எடுத்துக் கொள்வது நல்லது. சில உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
♦ தினமும் முட்டை, மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அசைவம் சாப்பிடாதவர்கள் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் உணவில் எடுத்து கொள்ளலாம்.
♦ தாளிக்கீரை இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு எடுத்து சாறு பிழிந்து அந்த சாற்றை குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
♦ பாதாம் பருப்பை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாம். அஸ்வகந்தி மருந்து இலைத் துளிர்களைப் பறித்து எண்ணெயில் வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்கும்.
♦ பச்சை வேர்கடலை மென்று சாப்பிடலாம்.
♦ ஆலம் விழுது, துளிர் விதை இவ்விரண்டையும் எடுத்து மைய அரைத்து, 5 கிராம் எடுத்து பசும்பாலில் கலந்து காலையில் மட்டும் உட்கொண்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
♦ கோவை இலையை வெள்ளைப் பூண்டுடன் நெய்யில் வதக்கி தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
♦ ஆல்வல்லி கிழங்கு வேக வைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடலாம்.
♦ அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
♦ பப்பாளியை தோல் நீக்கி கடலைப் பருப்புடன் சேர்த்துக் கூட்டாகச் சமைத்துண்டால் பால் பெருகும்.
♦ சதகுப்பைக் கீரையை உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
♦ துளசி இலைகளைப் புட்டு போல் அவித்துக் கசக்கி பிழிந்துச் சாற்றை தினமும் ஒரு ஸ்பூன் அளவு குடித்து வர தாய்ப்பால் அதிகரிக்கும். இதயமும் பலமடையும்.
♦ அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும்.
♦ உணவில் பூண்டு, உளுந்து, பெருங்காயம், வெந்தயம், செவ்வாழைப் பழம், உருளைக் கிழங்கு பயன்படுத்தினால் தாய்ப்பால் பெருகும்.
♦ வெட்டிவேர் சர்பத் அருந்த தாய்ப்பால் பெருகும். சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைச் கலந்து காய்ச்சிக் கொடுத்தால் தாய்ப்பால் சுரக்கும்.
♦ இரும்புச்சத்து வைட்டமின், அதிகமுள்ள உணவுப்பொருட்களான அவல், கோதுமை, சோயாபீன்ஸ், சுண்டைக்காய், கொத்தமல்லி, பேரீச்சம் பழம், திராட்சை பழம், வெல்லம், கேழ்வரகு, சீரகம் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது குழந்தைக்கு தேவையான அளவு பால் கிடைக்கும்.
♦ அதிகம் பூண்டு சேர்த்து தயாரிக்கப்பட்ட சூப் மிதமான சூட்டுடன் அருந்தி வந்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.
♦ கேழ்வரகை முளைக்கட்டி இடித்து கஞ்சியாகச் குடிக்க வேண்டும். இதில் முளைகட்டிய வெந்தயப் பொடியை சேர்த்து குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்