கலாசாரம் என்பது நாட்டிற்கு நாடு, இனத்திற்கு இனம், மதத்திற்கு மதம் என பல வகைகளில் வேறுபடுகின்றது. நாம் கணக்கெடுக்காத விடயங்கள் ஏனைய நாட்டினருக்கு அல்லது சமூகத்தினருக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையலாம். சில நாடுகளில் சில விடயங்கள் தெய்வ வழிபாட்டிற்கு உகந்ததாக காணப்படுகின்றன. அவற்றில் மனிதர்கள், மரங்கள் மற்றும் விலங்குகளும் உள்ளன. இன்று நாம் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் போற்றப்படும் சில விலங்கினங்கள் பற்றி பார்ப்போம்.
பசு
பசு இந்தியாவை போலவே நம் நாட்டிலும் ஒரு புனித விலங்காக கருதப்படுகின்றது. நம் நாட்டில் இது ஒரு மத நம்பிக்கையை தாண்டி விவசாய கலாசாரத்துடன் கால்நடைகளுக்கு வழங்கப்பட்ட சிறப்பு இடமும் காரணமாக இருந்தது. ஆனால் இந்தியாவில், பெரும்பான்மையான இந்து மத மக்களிடத்தில் பசுவுக்கு சிறப்பான இடமுண்டு. உதாரணமாக, நந்தி சிவபெருமானின் வாகனமாகக் கருதப்படுகிறது. தெய்வீக உலகில் வாழ்ந்த சூராபிதேனா அல்லது காமதேனு எனும் பசுவுக்கு தேவையான வளங்களை கொடுக்கும் திறன் உள்ளதென அவர்கள் நம்பினர். இந்த செல்வாக்கின் காரணமாக பொலன்னறுவை காலத்தின் சந்திரவட்டக்கல்லில் இருந்து காளையின் உருவம் அகற்றப்பட்டதென நம்பப்படுகிறது.
குரங்கு
குரங்கு இந்து மதத்தின் செல்வாக்கின் கீழ் போற்றப்படும் மற்றொரு விலங்காகும். இந்த கலியுக காலத்திலும் அனுமன் கடவுளாக போற்றப்படுகின்றார். அதன் காரணமாக குரங்குகள் இந்துக்களால் போற்றப்படுகின்றது. முஸ்லிம் நாடாக மாறியுள்ள இந்தோனேசியாவின் பாலி தீவில், புனித குரங்குகளின் காடு என்றும் ஒரு இடமுண்டு. இந்த விலங்குகளுடன் ஒன்றிய வாழ்க்கை பல நூற்றாண்டுகளாக வனவாசிகளிடம் நடைமுறையில் உள்ளது.
பூனை
பூனைகளை முதன்முதலில் எகிப்தியர்கள் வளர்ப்பு விலங்குகளாக பராமரித்தனர். பூனைகள் தெய்வீக சக்திகளைக் கொண்ட விலங்கின் ஒரு பகுதி என்ற அவர்களின் நம்பிக்கையே இதற்கு காரணம். மேலும், பாம்புகளால் பாதிக்கப்பட்ட நைல் காட்டில் பூனை தான் எகிப்தியர்களின் பாதுகாவலராக மாறியது. இதன் காரணமாக, அவர்கள் தங்கள் காவல் தெய்வமான பஸ்தியை பூனையின் தலையுடன் சித்தரித்தனர். இன்றுவரை, மம்மியிடப்பட்ட பூனை சடலங்கள் பல பிரமிட்டுகளில் காணப்படுகின்றன.
நாய்
மனிதனின் நீண்டகால நண்பராக இருப்பதால், நாய் வழிபாடு வேட்டையாடும் காலத்திலிருந்து பல கலாசாரங்களின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இந்தியாவின் சில பகுதிகளில் இன்னும் நாய்களுக்கு ஐந்து நாட்கள் பூஜை செய்யும் நடைமுறை இந்துக்களிடம் உள்ளது. நாயின் இறைச்சி உண்ணும் சீனாவின் சில பகுதிகளில்கூட, நாயை தெய்வமாக வழிபடுகின்றனர். சீனப் புத்தாண்டுக்கு அடுத்த நாள் நாய்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
யானை
பூமியில் மிகப்பெரிய உயிரினமான யானை முதன்மையாக இந்தியாவில் போற்றப்பட்டது. விநாயக வழிபாடும் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இலங்கை உள்ளிட்ட தமிழர்கள் விரவி வாழும் நாடுகள் அனைத்திலும் விநாயகர் முழுமுதற் கடவுளாக போற்றப்படுகிறார். யானை என்பது போக்குவரத்துக்கும் போருக்கும் இன்றியமையாத விலங்கு. குறிப்பாக, அலெக்சாண்டர் தி கிரேட்ஸின் இந்திய படையெடுப்பு தோல்வியடைந்தது. ஏனெனில் அலெக்ஸாண்டரின் வீரர்களும் குதிரைப்படைகளும் பெரிய யானைகளின் தாக்குதலை தாங்க முடியாமையே அதற்கு காரணம்.
புலி
பண்டைய கொரிய நம்பிக்கைகளின்படி, புலி ஒரு தெய்வீக ஆவியாகவும் மற்றும் மேற்கு நாடுகளின் பாதுகாவலராகவும் கருதப்பட்டது. புலியை தைரியம் மற்றும் சக்தியின் அடையாளமாகப் பார்ப்பது ஒருவரை சுற்றியுள்ள தீய சக்திகளைத் தடுத்து அவரை ஒரு அதிஷ்டசாலியாக மாற்றும் என்று அவர்கள் நம்பினர். வெள்ளைப் புலிகள் புனிதமானவையாக கருதப்பட்டன. மேலும் அவை மிகவும் புத்திசாலித்தனமாகவும் இயற்கையில் வெண்மையாகவும் கருதப்பட்டன. நேபாளம் மற்றும் வியட்நாமின் சில பகுதிகளில் புலிகளுக்கென அர்ப்பணிக்கப்பட்ட கோயில்களும் உள்ளன.
பாம்பு
கிறிஸ்தவ கலாசாரங்களில், பாம்பு கெட்ட சக்தியின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆனால் கிழக்கத்தேய நாடுகளில், பாம்பு ஞானத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. சில அறிஞர்களின் கூற்றுப்படி, தடைசெய்யப்பட்ட மரத்திலிருந்து ஆப்பிள்களை சாப்பிட ஆசைப்படுவதால் மனிதனுக்கு ஞானம் கிடைத்துள்ளது. கிறிஸ்தவமயமாக்கலுக்கு முன்பு, வட அமெரிக்காவில் ஒரு பழங்குடி சமூகம் ஆண்டுதோறும் பாம்பு வழிபாடு மற்றும் நடன விழாக்களை நடத்தியது. இந்தியாவில் பாம்புகளுக்கு, குறிப்பாக நாகங்களுக்கு காட்டப்படும் மரியாதையை அநேகமாக ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். இலங்கையிலும் நாக வழிபாடு இந்துக்களிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.